செவ்வாய், 12 மார்ச், 2024

இரட்டை இலை சின்னத்தில் தான் தேர்தலை சந்திப்போம் - ஓபிஎஸ் உறுதி

சென்னை கிண்டியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில், டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங், எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நள்ளிரவு 12 மணி வரை நீடித்த இந்த பேச்சுவார்த்தையில், தொகுதி பங்கீடு, எந்த சின்னத்தில் போட்டியிடுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், பாஜகவுடன் அதிக கட்சிகள் கைகோர்த்துள்ளதால், மெகா கூட்டணி உருவாக்கியுள்ளது என்று கூறினார். மக்களவை தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிட உள்ளோம் என்பது குறித்து விரைவில் அறிவிப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


இதையடுத்து  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று பாஜக சார்பில் எந்த நிர்பந்தமும் தரவில்லை எனக்கூறினார். மேலும், தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் குக்கர் சின்னத்தை ஒதுக்கும் என்று நம்பிக்கை இருப்பதாக கூறிய அவர், அமமுக வேட்பாளர்கள் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று உறுதிப்படக் கூறினார். மோடி 3 ஆவது முறையாக பிரதமரானால், தமிழ்நாட்டிற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வர முடியும் என்று நம்பிக்கையில் கூட்டணி அமைத்து இருப்பதாக டி.டி.வி. தினகரன் கூறினார்.


மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து தற்போது வரை, தான் முடிவெடுக்கவில்லை என்றும் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
 

திங்கள், 11 மார்ச், 2024

இன்று முதல் ரமலான் நோன்பு தொடக்கம்..

இன்று முதல் ரமலான் நோன்பு தொடக்கம்.. கடைபிடிக்க வேண்டிய விதிகள் என்னென்ன?


ரமலான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பது மரபு. நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். ஒவ்வொரு பகுதியிலும் பிறை தெரிவதற்கு ஏற்ப ரமலான் மாதம் தொடங்கும். சவூதி அரேபியாவில் ஞாயிற்றுக்கிழமை ரமலான் பிறை தென்பட்டது. இதனால் நேற்று (திங்கட்கிழமை) முதல் சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ரமலான் மாதம் நோன்பு தொடங்கியது.

இந்நிலையில் தமிழ்நாட்டிலும் பிறை பார்க்கப்பட்டு ரமலான் மாதம் தொடங்கிவிட்டதாகவும் ஏப்ரல் 11ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இதனால், நோன்பு நோற்பது, தொழுகை உள்ளிட்டவர்களை இஸ்லாமியர்கள் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நோன்பு காலத்தில் கடைபிடிக்க வேண்டியவைகள்..

1. புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் அனைத்து வகையான அசுத்தங்கள் மற்றும் இன்பங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். மாறாக, அவர்கள் பிரார்த்தனைகள், ஆன்மாவின் தூய்மை, ஆன்மீகம் மற்றும் தொண்டு ஆகியவற்றில் தங்கள் மனதை செலுத்த வேண்டும். இதை காலம் காலமாக இஸ்லாமிய மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

2. புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிப்பது இந்த மாதத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. எனவே, விரத விதிப்படி சூரியன் உதிக்கும் முன்பும், சூரியன் மறைந்த பின்பும் மட்டுமே உணவு உண்ணலாம்.

3. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ பாதிக்கப்பட்டவர்கள் இந்த நேரத்தில் நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். பருவமடையும் குழந்தைகள் நோன்பு வைக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அதே போன்று, மிகவும் வயதான பெரியோர்களும் நோன்பு வைக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை.

4. பாரம்பரியமாக, மக்கள் பேரீச்சம்பழத்துடன் நோன்பை முடித்து கொள்வார்கள்.

5. ஒரு மாத நோன்பை முடிக்கும் வகையில் மிகப்பெரிய இஸ்லாமிய பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தின் பண்டிகை நாளில், சந்திரனைப் பார்த்த பிறகு நோம்பு முடிவடைகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ரம்ஜான் கொண்டாட்டத்தில் உணவு தானம் செய்ய வேண்டும். அதாவது சமைத்த உணவை சுற்றியுள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து உண்ண வேண்டும்.

உச்ச நீதிமன்ற உத்தரவால் பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி?

உச்ச நீதிமன்ற உத்தரவால் பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி?


சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் குற்றவாளி என்ற தீர்ப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், எம்எல்ஏ-வாக தொடரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், தண்டனை வழங்கப்பட்டதால், பொன்முடியின் எம்எல்ஏ பதவி தானாக பறிபோனது.
அத்துடன், திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலகம் கடிதம் எழுதியது.

இதனிடையே, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சூமோட்டோ வழக்கில் அதிக தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக பொன்முடி தரப்பு வாதிட்டது.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் எம்பி அப்சல் அன்சாரி மீதான வழக்குகளில் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதையும் பொன்முடி தரப்பு சுட்டிக்காட்டியது.
திருக்கோவிலூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதால், அதற்கு முன்னதாக உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து,  சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இவ்வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவியை குற்றவாளி என அறிவித்த உயர்நீதிமன்ற உத்தரவும் நிறுத்திவைக்கப்பட்டது. குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டதால், பொன்முடி திருக்கோவிலூர் எம்எல்ஏ-வாக தொடரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, பொன்முடி தனது எம்எல்ஏ பதவியை திரும்ப பெறக்கோரி சட்டப்பேரவை செயலகத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனுடன், சபாநாயகர் அப்பாவு ஆலோசனை நடத்தினார்.

மேலும், சென்னை செனடாப் சாலையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திற்கு வந்த பொன்முடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது திமுக மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

இதே போன்று, பொன்முடியின் சொந்த மாவட்டமான விழுப்புரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். விசிக எம்பி ரவிக்குமாரும் இதில் பங்கேற்றார்.

இதனிடையே நியூஸ் 18-க்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த திமுக வழக்கறிஞர் வில்சன், மீண்டும் அமைச்சராக பொன்முடிக்கு எந்த தடையும் இல்லை என்றார். மேலும், மக்கள் பிரதிநிதிகளின் பதவிகளை பறிப்பதற்கு முன்னால், மூன்று மாதம் அவகாசம் வழங்கும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அமைச்சர் செல்லூர் ராஜு, பொன்முடியின் தலைக்கு மேல் இன்னமும் கத்தி தொங்கி கொண்டிருப்பதாக கூறினார்.குற்றவாளி என்ற தீர்ப்பும் நிறுத்திவைக்கப்பட்டதால், பொன்முடியின் எம்எல்ஏ பதவி தானாகவே அவருக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

ஞாயிறு, 10 மார்ச், 2024

இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்கு 3.5% இடஒதுக்கீடு

இஸ்லாம் மதத்திற்கு மாறிய பல்வேறு பிரிவினருக்கு 3.5% இடஒதுக்கீடு அளிக்கும் வகையிலான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. 

இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிசி, எம்பிசி, டிஎன்சி மற்றும் எஸ்சி பிரிவினர் 3.5% இடஒதுக்கீடு பெறும் வகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த முஸ்லிம் என சாதி சான்றிதழ் வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இஸ்லாமியர்களாக மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,  அறிவிக்கப்படாத சமூகங்கள் மற்றும் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களின் கோரிக்கை அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த முஸ்லிம்களாக கருத உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிற பிரிவை சேர்ந்தவர்கள் 3.5 % இடஒதுக்கீடு பெறும் வகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற சாதி சான்றிதழ் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  அதேபோல் பிசிஎம் என சாதி சான்றிதழ் வழங்கும் போது உரிய வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 

போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்ட ரவுடி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!


 நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் கடந்த 7 ஆம் தேதி கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையால் சுட்டு பிடிக்கப்பட்ட பேச்சிதுரை என்ற ரவுடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தென்திருபுவனத்தை சேர்ந்த ரவுடிகள் பேச்சித்துரை (23),  சந்துரு (23)  கடந்த 7 ஆம் தேதி அன்று மாலையில் விளாங்குடி பகுதியில் ஒருவரை கொலை செய்து விட்டு அங்கிருந்து திருவிடைமருதூர் செல்லும் வழியில் அரசு பேருந்தை வழிமறித்து அரிவாளால் கண்ணாடிகளை உடைத்துள்ளனர்.  இதனைக் எதிர்த்து கேட்ட ஓட்டுநர்,  நடத்துநரை அரிவாளால் வெட்ட விரட்டியுள்ளனர்.  இந்த தகவலறிந்து வீரநல்லூர் போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

போலீஸாரை பார்த்ததும் ரவுடிகள் தப்பியோடியுள்ளனர். அவர்களை விரட்டி சென்றபோது வீரநல்லூர் போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர் செந்தில்குமார் (35) என்பவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.  பின்னர் அருகில் உள்ள வயல்வெளிகளில் புகுந்த ரவுடிகளுக்கும்,  போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  அப்போது துப்பாக்கிச்சூடு நடத்தி போலீசார் பேச்சுத்துரையை பிடித்தனர்.  சந்துரு அங்கிருந்து தப்பியோடினார்.

இதனையடுத்து சுட்டுப் பிடிக்கப்பட்ட பேச்சித்துரை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பேச்சித்துரை இன்று உயிரிழந்தார்.  இதனைத் தொடர்ந்து வீரவநல்லூர் மற்றும் பேச்சித்துரை சொந்த ஊர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Adult திரைப்படத்துறையில் அடுத்தடுத்து நிகழும் மரணங்கள்


 

அமெரிக்காவின் Adult திரைப்படத்துறையில் அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் – 3மாதத்தில் 4பேர் உயிரிழப்பு!


அமெரிக்க Adult திரைப்படத் துறையில் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் Adult படங்களில் நடித்து வந்த நடிகர்கள் சமீபகாலமாக அடுத்தடுத்து உயிரிழந்து வருவது தொடர் கதையாகியுள்ளது. கடந்த 3 மாதங்களில் 4வது நபராக நடிகை சோபியா லியோ மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.



அமெரிக்காவின் மியாமி நகரைச் சேர்ந்தவர் நடிகை சோபியா லியோன்.  26 வயதான இவர், தனது 18வது வயதில் Adult படங்களில் நடிக்கத் தொடங்கினார்.  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த இவருக்கு அமெரிக்க மாடலிங் ஏஜென்ஸியான 101 மாடலிங் இங்க் நிறுவனத்தின் மூலம் குறுகிய காலத்தில் மிகப்பெரிய நட்சத்திரமாக மாறினார். கடந்த 9 ஆண்டுகளில் ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவராக சோபியா லியோன் மாறினார்.

இந்த நிலையில் மெக்ஸிகோ நகரிலுள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த மார்ச் 1ஆம் தேதி சுயநினைவின்றி நடிகை சோபியா கிடந்துள்ளார். இதனையடுத்து அவரின் குடும்பத்தினர் சோபியாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர்.
எனினும், சோபியா சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை  உயிரிழந்துவிட்டதாக அவரின் வளர்ப்பு தந்தை மைக் ரொமேரோ குறிப்பிட்டுள்ளார்.

அவரில் உயிரிழப்பை பலர் உறுதி செய்துள்ளனர். கோ ஃபன்ட் மீ என்ற நிதி திரட்டும் சமூக வலைதளத்தில் இந்த செய்தியை  குறிப்பிட்டுள்ளது.  அதேபோல  சோபியாவுக்கு நெருக்கமான ஃபுளோரிடாவைச் சேர்ந்த ஏஎம்ஏ ஏஜென்ஸியின்  உரிமையாளர் பிரையன் பெர்க்கும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.



டிடிவி தினகரனுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் - ஓபிஎஸ்

 

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் இணைந்து, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில், தங்கள் அமைப்பு சார்பில் போட்டியிடுவோம் என ஏற்கனவே அறிவித்திருந்தார். தங்கள் அமைப்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம், சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் நேர்காணல் நடத்தினார்.

இதையடுத்து, அங்கு சென்ற பாஜக குழுவினர் ஓ.பன்னீர்செல்வத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் மற்றும் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். பாஜக தரப்பில், மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங், எல்.முருகன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், தங்கள் தரப்பில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம் என்பதை பாஜக குழுவிடம் தெரிவித்ததாக கூறினார்.

மேலும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடனும் பாஜக குழுவினர் பேச்சு நடத்த இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


வேட்பாளர் பட்டியலுடன் டெல்லி செல்லும் அண்ணாமலை


 

பாஜகவின் 10 தொகுதிகள்.. வேட்பாளர் பட்டியலுடன் டெல்லி செல்லும் அண்ணாமலை


நாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் , அரசியல் கட்சியினர் தங்கள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை இறுதி செய்து வருகின்றனர்.  இந்த வகையில் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டில் தமிழ்நாடு பாஜக தீவிரம் காட்டி வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக ஒரே கூட்டணியில் இருந்த நிலையில் தற்போது இரு கட்சிகளும் தனித்தனியாக பிரிந்து தேர்தலை சந்திக்கின்றன. திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் களம் காண இருக்கின்றன.

இந்நிலையில், கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெறவுள்ளது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர் எல்.முருகன், தேசிய மகளிர் அணி வானதி சீனிவாசன் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்டோரும் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டில் வெற்றி வாய்ப்புள்ள 10 மக்களவைத் தொகுதிகளின் பட்டியலை இறுதி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இதனுடன் வேட்பாளர் பட்டியலும் தயார் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பாஜக சார்பில் வெளியாகவுள்ள 2-வது வேட்பாளர் பட்டியலில் இந்த 10 தொகுதிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டம் முடிந்த பின்னர், டெல்லி செல்லவுள்ள அண்ணாமலை, இன்று தேர்வு செய்யும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியலை மேலிட தலைவர்களிடம் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளி, 8 மார்ச், 2024

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை!


புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை! 5 நாளில் சவரனுக்கு ரூ.1760 உயர்வு!



சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.49,200-க்கு விற்பனையாகிறது. 

தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

அந்த வகையில்,  சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது.  இந்நிலையில், மார்ச் 5 ஆம் தேதி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 680 அதிகரித்தது.  இதையடுத்து, மார்ச் 6 ஆம் தேதி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.6,040க்கும் மற்றும் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ. 48,320 க்கும் விற்பனையானது. மார்ச் 7ம் தேதி ரூ.400 மற்றும் மார்ச் 8 ஆம் தேதி ரூ.120-ம் உயர்ந்தது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.49,200-க்கும் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.  வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.20-க்கும் பார் வெள்ளி ரூ.79,200-க்கும் விற்பனையாகிறது.
 

விஜய் அறிமுகப்படுத்திய செயலி..




 

விஜய் அறிமுகப்படுத்திய செயலி.. முதல் நாளே குவிந்த ரசிகர்கள்.. முடங்கிய ஆப்


2026 எங்கள் இலக்கு என சூளுரைத்துள்ள நடிகர் விஜய், கட்சி அறிவிப்புக்குப் பின்னர் செயலி வடிவில் தற்போது செயலில் இறங்கியுள்ளார். பிப்ரவரி 2-ஆம் தேதி அதிரடியாக கட்சி அறிவிப்பை வெளியிட்ட விஜய், திரைத்துறையில் இருந்து முழுமையாக விலகி, அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்தார்.


அதன் பின்னர், கட்சி அளவில் கூட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், மக்களுடன் கரம் கோர்க்கும் வகையிலான முதல் நிகழ்வை தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியுள்ளது. உறுப்பினர் சேர்க்கைக்காக பெண்கள் தலைமையில் அணி அமைத்த விஜய், மகளிர் தினத்தில் நடவடிக்கையை தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேக செயலியை அறிமுகம் செய்த கட்சியின் தலைவர் விஜய், முதல் உறுப்பினராக கட்சியில் இணைந்தார்.


நள்ளிரவில் ஓபிஎஸ் நடத்திய திடீர் ஆலோசனை..

 

நள்ளிரவில் ஓபிஎஸ் நடத்திய திடீர் ஆலோசனை.. பண்ருட்டி ராமச்சந்திரன் முக்கிய அறிவிப்பு


அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்த பிறகு ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு சரிந்து வருகிறது. இந்நிலையில் பாஜகவுடன் கைகோர்த்துள்ள ஓபிஎஸ் , பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என்று தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆதரவாளர்களுடன் நள்ளிரவில் ஆலோசனை நடத்திய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செவல்வம், தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள்  மார்ச்  10 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.

நேற்று இரவு 10.15 மணியளவில் தொடங்கிய ஆலோசனை நள்ளிரவு 12.30 மணி வரை நடைபெற்றது.  அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் அணி சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனு பெற உள்ளதாகத் தெரிவித்தார். தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள்,  நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 10 ஆயிரம் ரூபாயை செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், விண்ணப்பம் அளித்த நபர்களிடம் மாலை 6 மணி முதல் நேர்காணல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல பாஜக.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்து ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழுவில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன்,ஜே.சி.டி பிரபாகர், தர்மர், கு.ப. கிருஷ்ணன், புகழேந்தி, மருது அழகுராஜ் ஆகியோர் இடம்பிடித்து உள்ளனர்.

பாஜகவுடன் எத்தனை தொகுதிகளை கேட்டுப் பெறப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓபிஎஸ் அணியில் பிரதானமான அதிமுக நிர்வாகிகள் அதிகம் இல்லாதபட்சத்தில் குறைவான அளவே தொகுதிகளை ஒதுக்க பாஜக முடிவெடுக்கும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



வியாழன், 7 மார்ச், 2024

‛‛சாதி மறுப்பு திருமணம்’’.. மகளை பழிவாங்க மருமகனின் 15 வயது தங்கை படுகொலை.





 ஈரோடு: தனது மகள் சாதி மறுப்பு திருமணம் செய்துக்கொண்டதை ஏற்றுக்கொள்ள முடியாத தந்தை, மகளுடைய கணவரின் 15 வயது தங்கையை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் ஈரோட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இப்போதெல்லாம் யாரு சார் சாதி பார்க்குறாங்க? என்கிற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர். ஆனால், சாதியும், தீண்டாமையும் இன்னமும் நீடித்து வருகிறது என்பதை ஆணவக் கொலைகள் அடிக்கடி மெய்ப்பித்து வருகின்றன. அப்படி ஒரு சம்பவம்தான் ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடந்திருக்கிறது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே ஏரங்காட்டூர் குருவாயூரப்பன் நகரை சேர்ந்த பட்டியலின இளைஞர் சுபாஷ் (24) என்பவரும், சத்தியமங்கலம், காந்தி நகரை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மஞ்சு (22) எனும் இளம்பெண்ணும் கடந்து மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சாதியப் பாகுபாடு காரணமாக பெண் வீட்டார் இவர்களது காதலை ஏற்கவில்லை. இந்நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

எனினும் மஞ்சுவின் தந்தை சந்திரன், தாய் சித்ரா ஆகியோர் சுபாஷுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து மார்ச் 6ம் தேதியான நேற்று கோடூர சம்பவத்தை மஞ்சுவின் பெற்றோர் அரங்கேற்றியுள்ளனர். அதாவது, சுபாஷ் தனது தங்கை ஹரிணியை (15) இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த போது வேன் ஒன்று வேகமாக வந்து இவர்கள் மீது மோதியுள்ளது. இருவரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளனர். அப்போது வேனை ஓட்டி வந்த மஞ்சுவின் தந்தை சந்திரன், வேனை விட்டு இறங்கி வந்து "இத்தோடு செத்து தொலைடா" என்று திட்டிவிட்டு பின்னால் பைக்கில் வந்த தனது மனைவியுடன் தப்பி சென்றிருக்கிறார். இந்த கொலை முயற்சியில் சுபாஷின் 15 வயது தங்கை உயிரிழந்திருக்கிறார்.

படுகாயங்களுடன் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் சுபாஷ், மேற்குறிப்பிட்ட சம்பவத்தை வாக்குமூலமாக கொடுத்திருக்கிறார். வாக்குமூலத்தின் அடிப்படையில் பவானிசாகர் காவல் நிலையத்தில் எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் உள்பட பல பிரிவுகளில் சந்திரன், சித்ரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்படியான பாதுகாப்புகள் அனைத்தையும் வழங்கிட வேண்டும். தொடரும் ஆணவப்படுகொலைகளை அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளனர்.

மட்டுமல்லாது, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஈரோடு மாவட்டத் தலைவர் பி.பி.பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர்.


திருக்கழுகுன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு அதிசய சங்கு!


திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் சங்கு தீர்த்தக் குளத்தில் 12 வருடங்களுக்கு ஒருமுறை பிறக்கும் சங்கு இன்று காலை சங்கு தீர்த்தக் குளத்தில் பிறந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக
விளங்கும் அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இதில்,  தாழக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரம் சந்நிதி தெருவின் கடைசி பகுதியில் 12 ஏக்கர் பரப்பளவில் சங்கு தீர்த்த குளம் அமைந்துள்ளது.  சிறப்பு வாய்ந்த தீர்த்தமாக விளங்கும் இந்த சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு பிறக்கும் வைபவம் நடைபெற்று வருகிறது.

கடந்த 1939, 1952, 1976, 1988, 1999ம் ஆண்டுகளில் இக்குளத்தில் சங்கு தோன்றியுள்ளது. கடைசியாக செப்டம்பர் 1, 2011 ஆண்டு சங்கு தோன்றியுள்ளது.  அதன்பின்னர் 12 ஆண்டுகள் பிறகு இன்று சங்கு தீர்த்த குளத்தில் மிகுந்த சத்தத்துடன் சங்கு பிறந்துள்ளது.
சங்கு கரை ஓதுங்கியதும் கோயில் அர்ச்சகர்கள் அதை தட்டில் எடுத்துவைப்பார்கள். அதுசமயம் அதன் உள்ளே உள்ள சங்கு பூச்சியானது தனது சங்கு ஓட்டை பிரித்துவிட்டு மீண்டும் தண்ணீரிலேயே சென்றுவிடும்.

சங்கு பிறந்ததை கேள்விப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோயிலில் குவிந்து சங்கை கண்டு சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர்.  பொதுவாக கடலில் தான் சங்குகள் உருவாவது வழக்கம்.  ஆனால் திருக்கழுக்குன்றத்தில் உள்ள சங்கு தீர்த்த குளத்தில் சங்கு பிறப்பது ஒரு ஐதீகமாக பார்க்கப்படுகிறது.





 

மகளிர் தினத்தை முன்னிட்டு உணவு இலவசம்!



 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் உள்ள உணவகம் ஒன்று பெண்களுக்கு உணவு இலவசம் என அறிவித்துள்ளது. 


ஈரோடு மாவட்டம் கல்யாணசுந்தரம் சாலையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் மகளிர் தினத்தை முன்னிட்டு மருமகள் மற்றும் மாமியார் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி உணவை ஊட்டிக் கொள்ளும் போட்டி நடைபெற்றது.  இந்த போட்டி மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 6 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மாமியார் மற்றும் மருமகள் உணவகம் சார்பில் ஒரு கண்டிஷன் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அதில், மாமியார் மற்றும் மருமகள் இருவரும் அன்பை பரிமாறும் வகையில் உணவை ஒருவருக்கு ஒருவர் பரிமாறி ஊட்டிக்கொண்டால் அவர்கள் சாப்பிடும் உணவு முழுவதும் இலவசமாக கொடுக்கப்படுகிறது.

இந்த போட்டியின் மூலம் மாமியார்,  மருமகள் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி அவர்களுக்குள் நல் உறவை ஏற்படுத்தும் வகையில் இப்போட்டியானது நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த போட்டியில் ஏராளமான மாமியார், மருமகள் என பலரும் கலந்து கொள்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு




சிறுமி பாலியல் வன்கொடுமை கொலைக்கு கண்டனம் - புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு




கடந்த 2 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு தவறான எண்ணத்துடன் சிறுமியை அழைத்துச் சென்ற 19 வயது இளைஞரான கருணாஸ், விவேகானந்தனின் வீட்டின் பின்புறம் வைக்கோல்போர் அருகே வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த 57 வயதான விவேகானந்தன், கருணாஸை விரட்டிவிட்டு, சிறுமியின் கை, கால்களை கட்டி, வாயை மூடி தானும் பாலியல் வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதில் சிறுமி மூச்சு திணறி உயிரிழந்த நிலையில், விவேகானந்தனும் கருணாஸூம் இணைந்து சிறுமியின் உடலை வேட்டியில் கட்டி, அன்றைய தினமே வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் கால்வாயில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட விவேகானந்தன் மற்றும் கருணாஸ் ஆகியோருக்கு மருத்துவ பரிசோதனையை முடித்த பின்னர், புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த காவல்துறையினர் திட்டமிட்டனர். ஆனால், அங்கு ஏராளமான வழக்கறிஞர்கள் குவிந்திருந்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதனால், நீதிபதியிடம் சிறப்பு அனுமதி பெற்ற காவல்துறையினர், 2 பேரையும் காலாப்பட்டு மத்திய சிறைக்கு நேரடியாக அழைத்துச் சென்றனர். இதையடுத்து, மூன்றாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இளவரசன் நீதிமன்றத்தில் இருந்து சிறை வளாகத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார்.

பின்னர், இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர்கள் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறுமி கொலை வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள கலைவாணன் தலைமையிலான சிறப்புக்குழு, சிறுமியின் அண்டை வீட்டாரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள மேலும் 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சிறுமி கொலை வழக்கில் அலட்சியமாக இருந்த முத்தியால்பேட்டை காவல் நிலையத்தின் ஆய்வாளர் தனசெல்வம், உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன் மற்றும் காவலர்கள் 11 பேர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதே போல, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் சுவாதி சிங் போக்குவரத்துப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனிடையே, சிறுமி கொலைக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில், புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி , திமுக அமைப்பாளர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக சார்பில் தனித்தனியாக இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக வழக்கறிஞர்களும் அறிவித்துள்ளனர். தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வணிக வளாகங்கள் இயங்காது எனவும், கடைகள் அடைக்கப்படும் எனவும் அந்தந்த சங்கங்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு அடைப்பு காரணமாக, புதுச்சேரியில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல, இன்று நண்பகல் மற்றும் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதன், 6 மார்ச், 2024

Shivaratri 2024

 

Shivaratri 2024





மகா சிவராத்திரி நாளில் சிவனை வழிபட்டு பார்வதி தேவியும், தேவர்களும் வேண்டிய வரங்களை பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. அது போல் நாமும் சிவ பெருமானை முழு சரணாகதியுடன், உண்மையான பக்தியுடன் வழிபட்டால் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தையும் சிவ பெருமான் நிறைவேற்றி வைப்பார் என்பது ஐதீகம். கவலைகள் நீங்கி, காரிய வெற்றியை தரக் கூடிய நாள் மகா சிவராத்திரி விரத நாளாகும்.
இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் சிவராத்திரி விரத முறைகள் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் சிவராத்திரி விரதத்தின் மூலம் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியம் விளக்கம் அளிக்கிறார் புதுக்கோட்டை மாவட்ட அர்ச்சகர் பாலாஜி..

பொதுவாக சிவாலயங்களில் நான்கு , ஐந்து, ஆறு கால பூஜைகள் சிவராத்திரி அன்று நடைபெறும். அதனை தொடர்ந்து வீடுகளிலும் விரதம் இருந்து சிவராத்திரி அன்று சிவபெருமானை வழிபாடு வேண்டும். காலை முதல் விரதம் இருந்து சிவபுராணம், தேவாரம் ,திருவாசகம் ஆகியவற்றை மனதார பாடி சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும் .
அவ்வாறு செய்வதனால் பாற்கடலில் இருந்து விஷத்தை எடுத்து தானுண்டு தேவர்களை காத்தது போல ,சிவபெருமான் நம்முடைய பித்ரு தோஷம் ,சாபங்கள், பாவங்கள் ஆகியவற்றை நிவர்த்தி செய்து துன்பங்களை விலக்கி இன்பங்களை தருவார் என்பது ஐதீகம் .முதலில் சிவபெருமானை வழிபடுவதற்கு முன் அவரது வாகனமான நந்தியை வழிபட வேண்டும்.

குறிப்பாக இந்த மகா சிவராத்திரி அன்று விரதம் இருக்கும் பெண்களுக்கு பல்வேறு நன்மைகள் நடக்கும். இந்த வெள்ளிக்கிழமை வருகின்ற சிவராத்திரிக்கு மிகுந்த சிறப்பு உண்டு .அதாவது பெண்கள் வீடுகளையெல்லாம் தூய்மைப்படுத்தி இந்த மகா சிவராத்திரியில் காலை முதல் விரதம் இருந்து மாலை வேளையில் சிவாலயம் சென்று வழிபாடு நடத்துவதன் மூலம் தங்கள் குடும்பத்தில் நன்மை பெருகி , குழந்தைப்பேறு இல்லாதவர்க்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் அர்ச்சகர் கூறியுள்ளார்.


JUSTICE FOR AARTI

 

புதுச்சேரி சிறுமி உடலுக்கு இன்று இறுதி சடங்கு











புதுச்சேரியில் வீட்டின் அருகே சாக்கடையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உடற்கூராய்வில் உறுதியானது. அவரது உடலுக்கு இன்று இறுதி சடங்கு நடைபெறுகிறது.

புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த இரண்டாம் தேதி மாயமானார். சிறுமியை இரண்டு நாட்களாக காவல்துறையினர் தேடி வந்த நிலையில், வீட்டின் அருகே இருந்த சாக்கடைக் கால்வாயில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. சாக்கடையில் கிடந்த மூட்டையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அதே பகுதியைச் சேர்ந்த 54 வயதான விவேகானந்தன், 19 வயது இளைஞர் கருணாஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

ஜிப்மர் மருத்துவமனையில் நடந்த உடற்கூராய்வில், சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் புதுச்சேரி முழுவதும் தீயாகப் பரவி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே திரண்ட மக்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

கஞ்சா போதையே இக்கொடூர சம்பவத்திற்கு காரணம் என்று கூறி  பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். புதுச்சேரி நீதிமன்றம் முன் வழக்கறிஞர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளுக்கு ஆதரவாக யாரும் ஆஜராக கூடாது என்று முடிவு செய்திருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

ஜிப்மர் மருத்துவமனையில் சிறுமியின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததைத் தொடந்து, சிறுமியின் உடலை குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உட்பட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை 10 மணிக்கு இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.

இதனிடையே, முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் சட்டமன்றத்தில் நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் எம்.எல்.ஏக்களுடன் குழந்தையின் தந்தை உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.  குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுமியின் தந்தையிடம் உறுதி அளித்த முதலமைச்சர் ரங்கசாமி, சிறுமியின் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.

இதனிடையே,  சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, இன்று அமைதிப் பேரணியும், நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என இந்தியா கூட்டணி கட்சிகள் அறிவித்தன. இதே போன்று, புதுச்சேரி, காரைக்காலில் அதிமுக சார்பிலும் நாளை முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.

ஞாயிறு, 3 மார்ச், 2024

இந்த வாரம் சுட்டெரிக்க காத்திருக்கும் வெயில்...

 

இந்த வாரம் சுட்டெரிக்க காத்திருக்கும் வெயில்... வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு...




எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தமிழகத்தில் பல பகுதிகளில் மிக அதிக கன மழை பெய்தது. அதேபோல் கடந்த ஆண்டு கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டநிலையில் இந்த ஆண்டுக்கான கோடை காலம் நெருங்கிக் கொண்டிருக்க கூடிய நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அதாவது நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருவதினால் மதுரையில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் சதம் அடித்து வருகின்றது.

இந்த நிலையில் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் இந்த வாரம் வெயிலின் தாக்கம் 40 டிகிரி செல்சியஸ் அளவு வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வரைக்கும் 38 டிகிரி செல்சியஸ் அளவு வரை வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் இந்த வாரம் முழுவதும் 40 டிகிரி செல்சியஸ் அளவு வெயிலின் தாக்கம் இருப்பதினால் பொதுமக்கள் காலை 11 மணி அளவில் இருந்து மாலை 4 மணி அளவு வரை தேவையில்லாமல் வெளியே செல்வதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

 


தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று (மார்ச்.4) தொடங்குகிறது. 

இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று (மார்ச் 4) தொடங்கி, மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளில் தமிழ் உட்பட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.

இத்தேர்வை 7,534 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 20,207 மாணவர்கள், 5,000 தனித்தேர்வர்கள் மற்றும் 187 சிறை கைதிகளும் எழுதுகின்றனர். இதற்காக 3,302 தேர்வு மையங்க அமைக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வுக்கான அறைக்கண்காணிப்பாளர் பணியில் 46,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், தேர்வு மையங்களில், முறைகேடுகளை தடுக்க 4,334 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 154 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வறைக்குள் செல்போன் உட்பட மின்சாதனம் கொண்டுவர தடை உள்ளது. ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும். விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனா கொண்டு மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனா கொண்டு எழுதக்கூடாது.

அதேபோல், விடைத்தாளில் சிறப்பு குறியீடு, தேர்வு எண், பெயர் ஆகியவற்றை குறிப்பிடக் கூடாது. மாணவர் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள் விடைத்தாளுடன் சேர்த்துவழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட்டால் போதும். மேலும், அறை கண்காணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டும்.

தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிறரைபார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அந்த மாணவர் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடை விதிக்கப்படும் என்று தேர்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

செல்போன் செயலியில் களம் இறங்கும் விஜய்..

 


நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி இந்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கென புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் என்றும், அதன் மூலமே உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி இந்த வாரம் அறிமுகம் செய்ய கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. குறிப்பாக புதன் அல்லது வியாழக்கிழமையில் செயலியை அறிமுகம் செய்ய ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதற்கான செயலி மற்றும் பாஸ்வேர்ட் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

வெள்ளி, 1 மார்ச், 2024

ஏர்டெல் நிறுவனத்தின் புதிய அசத்தல் சிம் கார்டு...

             ஏர்டெல் நிறுவனத்தின் புதிய அசத்தல் சிம் கார்டு

 

தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம், சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் சிம்கார்டுகளுக்கு பதிலாக மறுசுழற்சிக்கு ஏற்ற PVC சிம் கார்டுகளை தாங்கள் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. இதற்காக IDEMIA என்ற டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மறுசுழற்சி சிம்கார்டுகளின் மூலமாக ஆண்டொன்றுக்கு 165 டன்களுக்கும் அதிகமான புதிய பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுவதை தடுக்க முடியும். இதனால் 690 டன்களுக்கு மேல் கார்பன் டை ஆக்ஸைடின் உமிழ்வை தடுக்கவும் முடியும் என்று ஏர்டெல் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஏர்டெல் நிறுவனத்தின் கூற்றுப்படி, ”இந்த புதுவகை சிம்கார்டுகளின் மூலம் பசுமையான முறையில் வாயுக்களை குறைத்தல், கழிவு பொருட்களை குறைத்தல், மறுசுழற்சி மற்றும் தயாரிப்பு மறுபயன்பாடு போன்றவைகளை பெற முடியும்” என்று தெரியவருகிறது.

இந்த சிம் கார்டுகள் புதிய மற்றும் பழைய பயனர்கள் என அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அமைய உள்ளது.


2030-2031 ஆண்டில், 2020 -2021 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் ,1 மற்றும் 2 GHG உமிழ்வையும் குறைக்க வேண்டும் என்பதனையும், இதே காலக்கட்டத்தில் 3 GHG உமிழ்வை 42 சதவீதம் குறைக்க வேண்டும் என்பதையும் ஏர்டெல் நிறுவனம் தன் இலக்காக வைத்துள்ளது.


பார்தி ஏர்டெல்லின் (Bharti Airtel) சப்ளை செயின் இயக்குனர் பங்கஜ் மிக்லானி கூறுகையில், “இந்திய டெலிகாம் துறையில் நாங்கள் தலைமை தாங்கிவரும் நிலையில் இப்படியொரு அறிவிப்பினை முதன்முதலாக அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சுற்றுப்புறத்துக்கு நன்மை பயக்கும் இவ்வகை சிம்களுக்கு நிச்சயம் மக்களிடம் வரவேற்பு இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தெருவில் சென்றவர்களை விரட்டி விரட்டி கடித்த வெறி நாய்

 

                             










                    தெருவில் சென்றவர்களை விரட்டி விரட்டி  கடித்த வெறி நாய்


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளான சாலரப்பட்டி, நீலம்பூர், போத்தநாயக்கனூர், கழுகரை, ஐஸ்வர்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் நாய் தொல்லை இருந்து வருவதாகவும் அதைப்பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே கோரிக்கை வைத்திருந்தனர்.


இந்நிலையில், நேற்றும், அதற்கு முன்தினமும் சாலையில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று, அப்பகுதி மக்களை மோசமாக கடித்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த பெண்கள் குழந்தைகள் என 20 பேர் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இது தொடர்பாக மருத்துவர் கூறுகையில், “வெறிநாய்க்கடிக்கு தேவையான மருந்து வரவழைக்கப்பட்டு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எட்டு பேர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்” என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகம், பொது மக்களை கடித்த வெறிநாயை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இரட்டை இலை சின்னத்தில் தான் தேர்தலை சந்திப்போம் - ஓபிஎஸ் உறுதி

சென்னை கிண்டியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில், டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர...